தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை டெல்டா மாவட்ட மக்களுக்கு நவீன சிகிச்சை மற்றும் புதிய மருத்துவ கருவிகளையும் அறிமுகப்படுத்தி வரும் நிலையில், இரத்த நாள அடைப்புக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் பெரிய இரத்தக் குழாய்களை மட்டுமே காட்டும், மிகச் சிறிய நுண் நாளங்களில் ஏற்படும் அடைப்புகளையோ அல்லது சுருக்கங்களையோ இது காட்டுவதில்லை. இந்த “கோரோவென்டிஸ் கோரோஃபுளோ” மேம்பட்ட ஊடுருவும் பரிசோதனை முறையானது, இரத்த நுண் நாளங்களில் உள்ள இரத்த ஓட்டத்தை அளவிட்டு, ஆஞ்சியோகிராமில் தெரியாத குறைபாடுகளைக் கண்டறிய உதவுகிறது.
இதய சிகிச்சையில் ஒரு முன்னோடி முயற்சியாக, இதயத்தின் நுண் இரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறியும் உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘கோரோவென்டிஸ் கோரோஃபுளோ’ எனப்படும் இந்த நவீன நோயறிதல் முறையை முதன்முறையாகப் பயன்படுத்தி, நான்கு நோயாளிகளுக்கு நுண் இரத்த நாள அடைப்புகள் மற்றும் செயல்பாட்டுக் குறைபாடுகள் குறித்த துல்லியமான மதிப்பீட்டை இம்மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இதயத்திற்கான இரத்த ஓட்டம், இடது மற்றும் வலது கரோனரி தமனிகளில் தொடங்கி, இதய தசையின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தம் வழங்கும் மிக நுண்ணிய தந்துகிகள் மற்றும் நுண் குழாய்கள் வரை நீள்கிறது. வழக்கமான ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் பெரிய முக்கிய தமனிகளை மட்டுமே காண முடியும். இவை மொத்த கரோனரி இரத்த ஓட்டத்தில் சுமார் 5% மட்டுமே. மீதமுள்ள மிகச் சிறிய கிளைகள் மற்றும் நுண் நாளங்களை வழக்கமான சோதனைகளில் பார்க்க இயலாது. ஆஞ்சியோகிராமில் தெரியும் முக்கிய தமனிகள் சுமார் 3-5 மி.மீ விட்டம் கொண்டவை; ஆனால் நுண் இரத்த நாளங்கள் 0.5 மி.மீ-க்கும் குறைவானவை. எனவே, இந்த நுண் நாளங்களில் ஏற்படும் அடைப்புகள், சுருக்கங்கள் அல்லது செயல்பாட்டுக் குறைபாடுகள் வழக்கமான ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிவதில்லை.
இது குறித்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் இதயவியல் சிகிச்சையில் முதுநிலை நிபுணரும், துறைத் தலைவருமான மருத்துவர் கேசவமூர்த்தி கூறுகையில், ஒருவருக்கு ஆஞ்சியோகிராம் முடிவு முற்றிலும் இயல்பாக இருந்தாலும், ‘நுண் நாள ஆஞ்சைனா’ அல்லது இரத்த நாளச் சுருக்கம் காரணமாகக் கடுமையான நெஞ்சு வலி அல்லது இரத்த ஓட்டக் குறைபாடு ஏற்படலாம். இதனால்தான் பெண்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களில் 20-30% பேருக்கு, ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் எந்த அடைப்பும் இல்லை என்று வந்தாலும் நெஞ்சு வலி தொடர்கிறது. இதனைக் கண்டறியாமல் விட்டால், இதயத் தசை பாதிப்பு, மாரடைப்பு, இதயச் செயலிழப்பு மற்றும் அரிதாகத் திடீர் மரணம் கூட ஏற்படலாம். வழக்கமான ஆஞ்சியோகிராமில் கண்டறிய முடியாத இந்தப் பாதிப்புகளைக் கண்டறிய, நுண் இரத்த நாள மதிப்பீடு எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது, என்றார்.
இந்தத் தொழில்நுட்பம் குறித்து மேலும் அவர் பேசுகையில்: “இதய சிகிச்சையில் புதிய பரிமாணங்களைச் சாத்தியமாக்கும் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கரோனரி நுண் நாள நோயைக் கண்டறிவதில் ‘கோரோவென்டிஸ் கோரோஃபுளோ’ ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இது அழுத்தம் மற்றும் வெப்பநிலையை உணரும் பிரத்யேக ‘கைடுவயர்’ மூலம் செயல்படுகிறது. இது, சிறிய இரத்த நாளங்களில் உள்ள எதிர்ப்புத்திறனை குறிக்கும் IMR மற்றும் மன அழுத்தத்திற்கு ஏற்ப இரத்த ஓட்டம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதைக் காட்டும் CFR போன்ற முக்கிய அளவீடுகளைத் துல்லியமாகக் கணிக்கிறது. ஆஞ்சியோகிராம் இயல்பாக இருக்கும்போதும் நுண் நாளச் செயல்பாட்டுக் குறைபாடுகளைக் கண்டறிய இது உதவுகிறது. இது ஒரு ஊடுருவும் செயல்முறையாகவும், சிறப்பு நிபுணத்துவம் தேவைப்படும் உத்தியாகவும் இருந்தாலும், வழக்கமான சோதனைகளில் தெளிவான விடை கிடைக்காத, காரணத்தை விளக்க முடியாத நெஞ்சு வலி இருக்கும் நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்,” என்று கூறினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது, இதயவியல் துறை நிபுணர்களான மருத்துவர்கள் சபரி கிருஷ்ணன் மற்றும் சீனிவாசன், மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரவீன் உடனிருந்தனர்.