கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் (சர்க்கரைத் துறை) அன்பழகன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளாக நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை சி.முட்லூர் மண்டபம் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால், சிதம்பரம் பாசிமுத்தான் ஓடை மற்றும் சிவகாமசுந்தரி ஓடை பகுதியிலும் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் நீர்ஆதார அமைப்புகளை தூர்வாரி தயார்நிலையில் வைக்க அறிவுறுத்தியதற்கிணங்க, கனமழை ஏற்படும் பொழுது மழைநீர் வடிய ஏதுவாகவும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காதவண்ணம் மழைநீர் வடிகால்கள், வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர் மாநகராட்சி பகுதிகளில் 493 கால்வாய்களும், 148 கி.மீ தொலைவுள்ள மழைநீர் வடிகால்களும், 9 சிறிய மற்றும் பெரிய நீர் நிலைகளும், 4.5 கி.மீ தொலைவுள்ள வாய்க்கால்களும், மேலும், 6 நகராட்சிகளில் 941 கால்வாய்களும், 215.96 கி.மீ தொலைவுள்ள மழைநீர் வடிகால்களும், 27 சிறிய மற்றும் பெரிய நீர் நிலைகளும், 10 கி.மீ தொலைவுள்ள வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளது.
பேரூராட்சித் துறையினர் மூலம் 509 கால்வாய்களும், 122.03 கி.மீ தொலைவுள்ள மழைநீர் வடிகால்களும், 89 சிறிய மற்றும் பெரிய நீர் நிலைகளும், நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் 3456 கால்வாய்களும், 200 சிறு பாலங்களும், 27 பெரிய பாலங்களும், 15.559 கி.மீ தொலைவுள்ள மழைநீர் வடிகால்களும், நீர்வளத்துறை மூலம், 18 சிறிய மற்றும் பெரிய நீர் ஆதார அமைப்புகளும், 95.50 கி.மீ தொலைவுள்ள வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளது.
நீர்வளத்துறையின் மூலம் மழைநீர் வடிகால்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளப் பணிகள் குறித்து சி.முட்லூர் மண்டபம் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால், சிதம்பரம் பாசிமுத்தான் ஓடை மற்றும் சிவகாமசுந்தரி ஓடை பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் பராமரிக்கப்படும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின்சார வாரியம் போன்ற அனைத்து துறைகளும் மழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆய்வின் போது செயற்பொறியாளர் நீர்வளத்துறை காந்தரூபன்,
உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.