பெரம்பலூர்.டிச.04. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பெரம்பலூர், வேப்பூர், ஆலத்தூர், வேப்பந்தடடை ஆகிய நான்கு ஒன்றியங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி, 09.12.2025 செவ்வாய்க்கிழமை அன்று பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 10.12.2025 புதன்கிழமை அன்று வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 11.12.2025 வியாழக்கிழமை அன்று வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 12.12.2025 வெள்ளிக்கிழமை அன்று ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ,பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது .
இம்முகாம்களில் சிறப்பு மருத்துவர்களான கண் மருத்துவர், காதுமூக்கு தொண்டை மருத்துவர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், RBSK மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகளை பரிசோதனை செய்து, மருத்துவ மதிப்பீடு செய்யவுள்ளனர்.
தகுதியுடைய மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்குதல், மாற்றுத்திறன் சான்றிதழ் புதுப்பித்தல், தேசிய அடையாள அட்டை (NID), தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID Card) பதிவு செய்தல், உதவி உபகரணங்களுக்கான பதிவு, ரயில் மற்றும் பேருந்து பயணச்சலுகை கோருவதற்கான பயண அட்டை, பராமரிப்பு உதவித்தொகைக்கான பதிவு, மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு ஆகிய சேவைகள் வழங்கப்படவுள்ளது.
மாற்றுத்திறனுடைய மாணவ மாணவிகள் இம்மருத்துவ முகாமில் குடும்ப அட்டை நகல் அல்லது Smart Card நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-6,தேசிய அடையாள அட்டை (NID) நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID கார்டு) நகல், கல்விச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் தேசிய அடையாள அட்டை புதுப்பித்து கொள்பவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.