திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக, தஞ்சை ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மற்றும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து இருதய நோய் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாமினை நடத்தியது.
இந்த மருத்துவ முகாமில் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
முகாமினை அதிமுக மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். முகாமில் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட நன்னிலம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும் இந்த முகாமில் ரத்த அழுத்தம், இசிஜி, எக்கோ, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமில் மருத்துவ ஆலோசனை பெற்ற பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனைகளை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் ஆலோசனைகளை வழங்கினர்.
ஏற்கனவே அதிமுக சார்பில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ வசதிகளை செய்து தந்தனர்.
அதனைத் தொடர்ந்து நன்னிலத்தில் அதிமுக சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே கோபால், நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ராம.குணசேகரன், வடக்கு ஒன்றியச் செயலாளர் சி.பி.ஜி அன்பு, நன்னிலம் நகரச் செயலாளர் பக்கிரிசாமி. திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் சின்னராஜ், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் எம்ஜிஆர் கருப்பையன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சம்பத் உள்ளிட்ட அதிமுக ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.