திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கும் மேல் திறந்தக்கதை குறித்து திருச்சி ஒர் பார்வை ஒர் பயணம் நிகழ்வில் திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி உள்ளிட்டோர் திருச்சி, புத்தூர்,-ஈ.வி.ஆர். சாலை சந்திப்பில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சிலையைப் பார்வையிட்டனர். வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார்செவாலியே சிவாஜி கணேசன் சிலை குறித்து பேசுகையில்,சிவாஜி கணேசன் 1928-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி விழுப்புரத்தில் பிறந்தார். திரையுலகில் வி.சி.கணேசனாக, அதாவது விழுப்புரம் சின்னய்யா கணேசனாக அறிமுகமாகி, பின்னர் சத்ரபதி சிவாஜி நாடகத்தில் நடித்ததால், ‘சிவாஜி கணேசன்’ என அழைக்கப்பட்டார்.

முதலில் அவர் திருச்சியில் உள்ள நாடகக்குழுவில் நடிக்க தொடங்கினார். அப்போது, கருணாநிதி, சிவாஜி, அன்பில் தர்மலிங்கம் எல்லாம் திருச்சியில் ஒன்றாக வளர்ந்தவர்கள். பின்னர் திரைத்துறையில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். சிவாஜி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் செவாலியே உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர்.

சிவாஜி 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி காலமானார். திருச்சியில் அவரது சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் கடந்த தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டு திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் சிவாஜிக்கு 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டது.சிலை திறப்பதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அந்த சிலை துணியை கொண்டு மூடப்பட்டு சிவாஜியின் சிலை திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டும் 14 ஆண்டுகளுக்கும் மேலாக அது அரசால் திறந்து வைக்கப்படாமல் இருந்தது. எனவே, உடனடியாக சிவாஜி சிலையை திறந்து வைக்க வேண்டும் என சிவாஜியின் குடும்பத்தினர், ரசிகர்கள், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, வேறு இடத்தில் பூங்காவில் சிவாஜி சிலை நிறுவப்பட்டு திறக்கப்படும் என பதிலளித்தார்.

திருச்சியைச் சேர்ந்த ஏ. மோகன் பாலாஜி என்பவர் சிலையைத் திறந்து வைக்க தாக்கல் செய்த ரிட் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, சிலையை ஏற்பாட்டாளர்களிடம் ஒப்படைக்கவோ அல்லது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் எந்த முக்கிய இடத்திற்கும் மாற்றவோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக ஒரு தீர்மானம் கூறியது. அதன் அடிப்படையில், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சிலையை வில்லியம்ஸ் சாலை-வார்னர்ஸ் சாலை சந்திப்பில் நிறுவலாம் என முடிவு செய்து சிவாஜி சிலை வார்னர்ஸ் சாலையில் உள்ள மினி பூங்காவில் மாற்றப்பட்டு நிறுவப்பட்டது.

ஆனால் பொது இடங்களில் சிலை நிறுவக்கூடாது என்ற உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் மீண்டும் சிலை திறப்பு விழா தள்ளிப் போனது.இதையடுத்து திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு சிவாஜி சிலை தனியார் இடத்தில் நிறுவப்படுவது குறித்து தனி தீர்மானமும் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி புத்தூர் ஈ.வி.ஆர். சாலை பகுதியில் 64.58 சதுர அடி பரப்பளவில் அரசு வழிகாட்டுதல் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் உருவச் சிலை நிறுவப்பட உள்ள இடத்தை அதன் உரிமையாளர்கள் மரகதம், பூரணி, தரணி ஆகியோர் தானமாக மாநகராட்சி மேயர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

சிலை அமைத்தல் பராமரித்தலுக்கான முழு செலவையும் சிலை அமைக்க கோரும் மேயர் அன்பழகனே ஏற்றுக்கொள்ள வேண்டும். வெண்கலத்திலான சிலையை மட்டுமே அமைக்க வேண்டும். அதன் பின்னர் கலெக்டர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறை அனுமதியுடன் சிலை அமைப்பதற்கு அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

.அதன்படி, பஞ்சப்பூர் புதிய பேருந்து முனைய திறப்பு விழாவிற்காக வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 8, 2025 அன்று மாலை புத்தூர்-ஈ.வி.ஆர். சாலை சந்திப்பில் நிறுவப்பட்டிருந்த சிவாஜி சிலையை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு மற்றும் அவரது மகனும் நடிகருமான விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொண்டனர் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *