குண்டடம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்ற முயற்சிப்பதை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை பொது குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் குண்டடம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரகாஷ், தலைமை பொது குழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக தலைமை கழக பேச்சாளர் திருப்பூர் சந்துரு இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில்,
கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவது, அந்த திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை சிதைக்கும் செயல் எனக் கடுமையாக விமர்சித்தார். மகாத்மா காந்தியின் பெயருடன் இணைக்கப்பட்ட இந்த திட்டம், உழைக்கும் மக்களுக்கு உரிமையாக வழங்கப்பட்ட வேலை உறுதி திட்டம் என்றும், அதை மாற்ற முயற்சிப்பது மக்களின் நலனுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.
கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் வட்டார தலைவர் ரத்தினசாமி, மதிமுக ஒன்றிய செயலாளர் செந்தில்நாதான், கொமுதேக மாவட்ட செயலாளர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.
100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரும், அதன் சட்ட உரிமையும் தொடர வேண்டும் என்பதே கிராமப்புற மக்களின் ஒருமித்த கோரிக்கையென அவர்கள் தெரிவித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளான ஈஸ்வரன், மணி, மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தொழிலாளர்களுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினர் அமைதியான முறையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டம், எந்தவித அசம்பாவிதமும் இன்றி நிறைவடைந்தது.