திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணி சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவரும், திரைப்பட நடிகருமான புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
தாராபுரம் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, மறைந்த தலைவர் எம்ஜிஆரின் நினைவை போற்றும் வகையில் 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூர் கிழக்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்ட துணைச் செயலாளர் வேதா தண்டபாணி தலைமையேற்றார். அமைப்புசாரா ஓட்டுனர் அணி தலைவர் கத்தி சுரேஷ், தாராபுரம் நகர அம்மா பேரவை செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயலாளர் செல்லத்துரை, செல்வம், மகேஷ், மணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இந்த நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில்,
தாராபுரம் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த ஓபிஎஸ் அணி நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகிகள், தமிழக அரசியலில் எம்ஜிஆர் ஆற்றிய சாதனைகள், ஏழை எளிய மக்களுக்காக அவர் மேற்கொண்ட மக்கள் நலத் திட்டங்கள், அவரது மனிதநேயமும் சமூக நீதி குறித்த உறுதியும் இன்றும் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன என்று நினைவுகூர்ந்தனர்.
எம்ஜிஆரின் வழியில் செயல்பட்டு, அவரது கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
முழுவதும் அமைதியும் மரியாதையும் நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்த நினைவு நாள் நிகழ்ச்சி, டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் புகழையும் அரசியல் பாரம்பரியத்தையும் மீண்டும் நினைவூட்டும் வகையில் நடைபெற்றது.