திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மகாத்மா காந்தி பெயரில் செயல்பட்டு வந்த கிராமப்புற மக்களின் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு சீர்குலைத்துள்ளது, இதற்கு ஆதரவான நிலையை அதிமுக எடுத்துள்ளது. இது கிராமப்புற மக்களுக்கு செய்த அநீதி ஆகும். கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2004 ஆண்டில் ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை உறுதித் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கி உள்ளனர்.
ஒன்றிய அரசு வழங்க வேண்டிய சம்பளத் தொகையில் 40 சதவீதம் மாநில அரசு வழங்க வேண்டும் என்று சட்டத்தை திருத்தியுள்ளனர். மொத்தத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளனர். ஒன்றிய அரசின் போக்கை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கேசவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு.ராஜா, காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் சத்தியமூர்த்தி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மதிமுக ஒன்றிய செயலாளர் ஜான் பிரதாப், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா மற்றும் 35 பெண்கள் உள்பட 495 பேர் பங்கு கொண்டார்கள். முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் நன்றி உரையாற்றினார்.