வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
முன்பகை காரணமாக திண்டுக்கல்லில் கணவன்-மனைவி படுகொலை.
திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் யேசுராஜ் வயது-42. இவர் கடந்த 2024ல் நடந்த திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடையவர். இவர் தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் யேசுராஜ் நேற்று இரவு நத்தம் சாலை, ஆர்.எம்.டி.சி நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் நீண்ட வாளால் யேசுராஜின் தலையில் வெட்டி தப்பிச்சென்றனர். இதையடுத்து யேசுராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதேபோல் யாகப்பன்பட்டியில் உள்ள யேசுராஜின் இரண்டாவது மனைவி தீபிகா வயது-35. இவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இரட்டை கொலை குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.