வெ. முருகேசன் செய்தியாளர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பொதுவான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இன்றைய குறைதீர் கூட்டத்தில் 61 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான அளவு உரங்கள் இருப்பு உள்ளன. எனவே, உரம் தேவைப்படும் பகுதிகளுக்கு தேவையான உரங்கள் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பன்றிகள் தொல்லையிலிருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை விரட்ட ஒருவித சத்தம் வரும் வகையில் இயந்திரம் தேனி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இயந்திரத்தின் பயன்பாட்டை அறிந்து, அவற்றை திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்தி பன்றிகள் தொல்லையிலிருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், இணை இயக்குநர்(வேளாண்மை) அனுசுயா, துணை இயக்குநர் (தோட்டக்கலை) பெருமாள்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன், வேளாண்மை செயற்பொறியாளர்(பொறியியல்) கோபி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் முன்பே தேதி மாவட்ட ஆட்சியர் மூலம் செய்தியாக அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து அலுவலர்களுமே விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டால் மட்டுமே விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிய முடியும். ஆனால் நேற்று 31.1.23 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வனத்துறை, கால்நடைத்துறை, மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து உரிய அலுவலர்கள் வராததால் விவசாயிகளின் கோரிக்கைகள் கேள்விக்குறியாக உள்ளது என்று விவசாயிகள் புலம்பியபடி சென்றனர்.