பரமத்தி வேலூர், ஜன.19-
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அணைச்செய் கண்ணன் ராசப்பன் அறக்கட்டளை சார்பில் கோலப்போட்டி, புகைப்பட போட்டி மற்றும் ஓவியப்போட்டி பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் கண்ணன் ராசப்பன் தலைமை வகித்தார். அறக்கட்டளையை சேர்ந்த தங்கராஜ், பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவை சேர்ந்த துரைசாமி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோலப் போட்டி, புகைப்பட போட்டி மற்றும் ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளுக்கு ஆன்லைனில் சுமார் 600- க்கும் மேற்பட்டோர் தங்களது படைப்புகளை அனுப்பி இருந்தனர்.
இதில் சிறப்பான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்கள் நேற்று தனியார் திருமண மண்டப வளாகத்தில் பல்வேறு விதமான கோலங்களை போட்டும் , பல்வேறு வகையான புகைப்படம் மற்றும் பல்வேறு வகையான ஓவியங்களை காட்சிபடுத்தியும் இருந்தனர்.
இறுதியாக நடுவர்கள் மூலம் சிறந்த கோலங்கள், புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் உள்ளிட்ட போட்டிகளில் தலா 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கோலப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.