மின்னொளியில் மின்னும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்றது. கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரைப் போல, இந்த ஆலயம் அமைந்திருப்பதால் இத்திருத்தலத்தை ‘தட்சிண துவாரகை’ என்றழைக்கப்படுகிறது.
கி.பி. 1072-1122 ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பிறகு 2022 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய நிலையில், கொரானா பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் கும்பாபிஷேகம் தடைப்பட்டது.
இதனையடுத்து மன்னார்குடி பக்தர்கள் மற்றும் ஆன்மீக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்ற தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா முயற்சியால் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு 2.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதனுடன் நன்கொடையாளர்கள் மூலம் தரப்பட்ட நிதியும் சேர்த்து மொத்தம் 15 கோடியில் கோவில் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று தற்போது நிறைவு பெற்றது.
இதனை அடுத்து காலை 9 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் மன்னார்குடி நகரமே விழாக்காலம் பூண்டுள்ளது.
மேலும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளிக்கிறது.