திருவாரூர், நவ.27- திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கடும்மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுகவின் சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டார். மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அரசின் உதவிகளை பெற்று தர வேண்டுமென அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் அவர் திருத்துறைப்பூண்டியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருவாரூர் மாவட்டத்தில் மூன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த இளம் பயிர்கள் கடந்த மூன்று நாட்களாக பெய்துள்ள மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. சாகுபடி செய்த பரப்பளவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் முறையாக தூர்வாரும் பணிகள் நடைபெறாததே இந்த பாதிப்பிற்கு காரணம். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை வடிய வைத்து பயிர்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே இந்த ஆண்டு பருவம் தவறிய மழையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. தற்போது சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு உணவு, உடை மற்றும் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தெரிவித்தார். இந்நிகழ்வின் போது திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் சண்முகசுந்தரம், திருவாரூர் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.