நாடு முழுவதும் பல்வேறு சேவைகள் மூலம் நிஜ ஹீரோக்களாக திகழும் 17 பேருக்கு கோவையில் அலெர்ட் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

நாடு முழுவதிலும் இடர்பாடுகளின் போது பொதுமக்களை காப்பாற்றுதல், சேவை மனப்பான்மையுடன் செயல்படுதல், பிறருக்கு உதவுதல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளை கவுரவிக்கும் விதமாக அலெர்ட் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த அமைப்பின் 9வது ‘அலெர்ட் பீயிங்’ (Alert Being) விருதுகள் வழங்கும் விழா பிஎஸ்ஜி மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், சத்யார்த்தி இயக்கத்தின் நிறுவனரும், நோபல் பரிசு பெற்றவருமான கைலாஷ் சத்யார்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மேலும், கோவையை விபத்தில்லா நகரமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ‘உயிர்’ அமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடும், பிரஜ்வலா அமைப்பின் இணை நிறுவனர் சுனிதா கிருஷ்ணனுக்கும், தொழில் வளர்ச்சியை ஊக்குவித்ததற்காக கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ராமசாமிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், தன்னை விட மூத்த மாணவன் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடுகையில், அவரை காப்பாற்றிய கோவை கண்ணம்பாளையம் அரசுப் பள்ளி 9ம் வகுப்பு மாணவன் மணீஷ்க்கும், ஜான்சி ரயில் நிலையத்தில் கர்ப்பிணிக்கு உதவிய ராணுவ மேஜர் ரோஹித்திற்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் அலர்ட் அமைப்பின் தலைவர் மைக் முரளிதரன் பேசுகையில், “பல்வேறு கல்லூரிகள் அலர்ட் கோல்டன் ஆர்மியைத் தொடங்க முன்வருகின்றன. இதன் மூலம் உயிரைக் காப்பாற்றும் திறன் கொண்ட 1 கோடி தன்னார்வலர்களை உருவாக்க உள்ளோம். மேலும் அவசர காலங்களில் உதவ வேண்டும் என்ற மனம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் எப்படி உதவுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட்டு விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவது என்பது குறித்து மக்களுக்குப் பயிற்சி அளிப்பதே எங்கள் நோக்கம்” என்றார்.

விருது பெற்றவர்கள் குறித்து நிறுவன அறங்காவலர் கலா பாலசுந்தரம் பேசுகையில், “9-வது அலர்ட் பீயிங் விருதுகள் மனிதநேயத்தின் சிறப்பான உணர்விற்கான ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த ஹீரோக்கள் எதையும் எதிர்பார்த்து இவற்றை செய்யவில்லை. ஆபத்து நேரத்தில் உதவி இருக்கிறார்கள். இது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; உயிரைக் காக்கும் தயார்நிலையை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றுவதற்கான ஒரு இயக்கம்” என்றார்.

அலர்ட் அமைப்பின் இணை நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான ராஜேஷ் திரிவேதி பேசுகையில், “கருணைக்கும், கொடுக்கும் குணத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. இந்தியாவில் சமூக முதலுதவி என்பதை ஒவ்வொருவரின் பொறுப்பாக மாற்றுவதற்கான எங்கள் பணியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *