புதுச்சேரி தொழில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் எம்.எல்.ஏ. சிவசங்கரன் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:- ஒற்றை சாளர முறை அரசின் தொழில் கொள்கையை விரைவில் அறிவித்து செயல்படுத்த வேண்டும். தொழில் தொடங்க விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு 33 ஆண்டுகளுக்கு நில ஒதுக்கீடு வழங்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் தொழிற்சாலை தொடங்க ஒற்றை சாளர முறை அனுமதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் தடை இன்றி மின்சாரம் வழங்க ஆவண செய்ய வேண்டும். தொழில் வளர்ச்சி விரோதமாக செயல்படும் தொழில் துறை இயக்குநரை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தொழில் கூட்டமைப்பின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் தொழில் கூட்டமைப்பின் தலைவர் பாபு கூறியதாவது:- அரசின் வேண்டு கோளுக்கு இணங்க மாசு இல்லா தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்பதுதான் தொழில் கூட்டமைப்பின் குறிக்கோள். ஆனால் துறை இயக்குனர் ஒத்துழைப்பு இல்லை. தொழிற் பேட்டைகளில் தடையின்றி மின்சாரம் பெற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.