மலையூர் இருமொழிக் கல்வெட்டு
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அருகே மலையூர் கிராமத்திற்கு தொல்லியல் ஆய்வாளர்: கி.திருச்செல்வன் தலைமையில் வரலாற்று மாணவர்கள் ம.கவியரசு, கி.கௌதம் இணைந்து கள ஆய்வில் ஈடுபட்டபோது வாரக்கொல்லை என்ற இடத்தில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ள கல்வெட்டு. எழுத்தமைதியின் அடிப்படையில் பொ.ஆ. 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்ததாகக் காணப்பெறுகின்றது. முதல் மூன்று வரிகள் தமிழிலும், மற்ற ஐந்து வரிகள் தெலுங்கு மொழியிலும் உள்ளன.
தமிழ் வாசகத்தில் ‘பெருமாளாச்சாழி’ என்ற ஆச்சாரி இனத்தவரின் பெயர் காணப்பெறுகின்றது. இந்த ஆச்சாரி இனத்தவர்களில் மற்றொருவரின் பெயர் தெலுங்கு மொழியில் ‘நஞ்சுபூண்டி அச்சாரி’ எனப் பொறிக்கப்பெற்றுள்ளது. வாபிலி, பிரலி கிராமம், பெரியூரி ஆகிய ஊர்ப்பெயர்களும், ஏ சேவேலி என்ற ஊரின் எல்லைக் குறிப்புச் சொல்லும் பொறிக்கப்பெற்றுள்ளன. தெலுங்கு மொழியில் ஆலம்பாடி என்றுள்ள ஊர்ப் பெயரே தற்போது வழங்கும் ஆலமரத்துக் கொட்டாய் என்ற ஊர்ப் பெயராகலாம். தற்போதுள்ள பிக்கிலி மற்றும் பெரியூர் என்ற ஊர்கள் தெலுங்கு மொழியில் பிரலி, பெரியூரி என்று கூறப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஆச்சாரி இனத்தவர்கள் இப்பகுதியில் வாழ்ந்த ஊராகவும், அவ்வூர்ப் பெயர்களையும், ஊரின் எல்லைகளையும் குறிப்பிடுவதாக உள்ளது.