தாராபுரம், அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி குண்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
குண்டடத்தில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி தலைமை வகித்தார்.
இதில், குண்டடம் வட்டாரத்தில் உள்ள 40 அங்கன்வாடி மையங்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள், எண்கள் உள்ளிட்டனவற்றைக் கற்பிக்கும் வகையில் மரத்தாலான கற்றல் உபகரணக் கருவிகள் வழங்கப்பட்டது.
மேலும், இந்த உபகரணக் கருவிகளைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்பிக்கும் முறைகளை திட்ட அலுவலர் புவனேஸ்வரி அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
இதில், வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தீபா, வட்டார ஒருங்கிணைப்பாளர் சங்கீதா, சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.