திமுக சார்பில் திருச்சியில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக தமிழக முழுவதும் உள்ள ஆட்களை ஏற்றிச் செல்ல அரசு பேருந்துகளை திமுகவினர் பயன்படுத்தியதால், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதேபோல் தஞ்சையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பணி முடித்துச் சென்ற கிராமவாசிகள் முதல் நகரவாசிகள் வரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமான பொதுமக்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பல மணி நேரங்களாக காத்திருந்தும் கூட அரசு பேருந்தே வராத சூழ்நிலையில் தங்கள் இல்லத்திற்கு செல்ல முடியாத நிலையில் தவித்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நிலை அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிலர் பேருந்து கிடைக்காத விரட்டியில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சென்ற வெளியூர் அரசு பேருந்துகளை சிறை பிடித்தனர்.
இதனால் அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்து நின்றனர். திமுக சார்பில் மாநிலத்தில் எங்கு மாநாடு நடைபெற்றாலும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அரசு பேருந்தை மக்கள் மீது அக்கறை இல்லாமல் பயன்படுத்துவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக தெரிவித்து அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.