தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே மளிகை, டீக்கடை, வீடுகளில் தொடர் திருட்டு
பொதுமக்கள் பீதி.!
குண்டடம் அருகே மளிகை, டீக்கடை மற்றும் வீடுகளில் .ஒரே இரவில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
குண்டடம் அருகேயுள்ள வெருவேடம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி(51), இவர் நந்தவனம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே மளிகை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்று அதிகாலை 5மணிக்கு கடையை திறக்க வந்தவர், கடையின் கிரில் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்தது கிடந்தது கண்டு அதிர்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ. 5ஆயிரத்தை திருடர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது உடனடியாக ஈஸ்வரமூர்த்தி குண்டடம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை 4.15மணிக்கு 3பேர் பைக்கில் வருவதும், அதில் ஒருவன் கம்பியுடன் வந்து கிரில் கதவின் பூட்டை நெம்பி உடைத்து உள்ளே புகுந்து பணத்தை எடுத்துச் சென்றதும் தெரிந்தது.
அந்த திருடன் தனது வேட்டியால் முகத்தை மூடியிருந்ததால் அடையாளம் தெரியவில்லை அதே போல குண்டடம் அருகேயுள்ள என்.காசிலிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(48), இவர் காசிலிங்கம்பாளையம் விஏஓ அலுவலகம் அருகே மளிகை மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று அதிகாலை கடைக்கு வந்த சிலர், பாலசுப்பிரமணியத்துக்கு போன் செய்து, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தெரிவித்தனர். உடனடியாக கடைக்கு வந்த பாலசுப்பிரமணியம் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் சீட்டு கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ரொக்க பணம் ரூ. 20ஆயிரம் மற்றும் சிகரெட் பண்டல்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும் பாலசுப்பிரமணியத்தின் கடைக்கு அருகில் பூட்டிக் கிடந்த வீட்டிலும் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் இதுபற்றி குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். 3திருட்டு சம்பவங்களிலும் ஓரே திருடர்கள்தான் கைவரிசை காட்டியிருக்க வேண்டும் என கூறப்படுகிறது. தொடர் திருட்டு சம்பவங்களால் இப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.