கோயம்புத்தூர், ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் (AIT) வளாகத்தில், “AURA ’26” என்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியின் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி, மாணவர்களின் புதுமைச் சிந்தனை மற்றும் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கியது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக Deloitte நிறுவனத்தின் அசோசியேட் டைரக்டர் கோகுல்குமார் நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், நவீன தொழில் துறைக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன்கள், புதுமையான அணுகுமுறை மற்றும் தொடர்ச்சியான கற்றல் மூலம் மாணவர்கள் எவ்வாறு தங்களைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்த முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஆதித்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் Er. C. சுகுமாரன், மேலாண்மை அறங்காவலர்கள் S. பிரவீன் குமார், டாக்டர். ஸ்ரீநிதி பிரவீன் குமார், இயக்குனர் டாக்டர். ஜோசப் V. தாணிகல், முதல்வர் டாக்டர். D. சோமசுந்தரேஸ்வரி மற்றும் டீன் அகாடமி டாக்டர். I. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஐடி துறைத் தலைவர் டாக்டர். மிஷ்மலா சுஷித் மற்றும் உதவிப் பேராசிரியர் திரு. S. வெங்கடேசன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
இக்கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது தொழில்நுட்பக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்த இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய குழுவினரையும், பங்கேற்ற மாணவர்களையும் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாகப் பாராட்டினர்.