மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

திருக்கடையூர் முதல் சீதை சிந்தாமணி வரையிலான மூன்று கிலோமீட்டர் சாலை சீரமைப்பு பணி கடந்த நான்கு மாதங்களாக நிறைவு பெறாததால் ஆபத்தான நிலையில் ஜல்லி கற்களை கடந்து செல்லும் கிராம மக்கள். விரைந்து சாலை அமைக்க அரசுக்கு கோரிக்கை.தேர்தல் புறக்கணிப்பு செய்யவுள்ளதாகவும் அறிவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் முதல் சீதை சிந்தாமணி வரையிலான மூன்று கிலோமீட்டர் சாலை கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
தொடர் போராட்டங்கள் காரணமாக கடந்த ஆண்டு ரூபாய் 1 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஈரடுக்கு தார் சாலை அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பழுதடைந்த பழைய சாலை உடைத்து போடப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
மீண்டும் கிராம மக்கள் போராட்டத்தின் காரணமாக ஈரடுக்கு கருங்கல் ஜல்லி கலவை கொட்டப்பட்ட நிலையில் சாலை பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பணிகள் துவங்கி நான்கு மாதங்களை கடந்த நிலையில் இதுவரை சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கருங்கல் ஜல்லியாக காட்சியளிக்கும் சாலையை கடந்து கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வரும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
சீதை சீந்தாமணி மட்டுமின்றி சுற்றியுள்ள சரபோஜிராஜபுரம், உலகமாதேவி, மாத்துர், முக்கரும்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இணைப்புச் சாலையாகவும் திருக்கடையூர் மயிலாடுதுறைக்கு இடைப்பட்ட சாலையாகவும் இச்சாலை அமைந்துள்ளது.
இச்சாலையை கடந்தே பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள், மருத்துவம் வேலை வாய்ப்பு என கிராம மக்களும் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் ஜல்லிக கற்களின் குவியலாக காட்சியளிக்கும் இச்சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.
எனவே போர்க்கால அடிப்படையில் திருக்கடையூர் -சீதை சிந்தாமணி இடையேயான கிராம சாலையை அமைக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தாமதம் ஆனால் தேர்தல் புறக்கணிப்பு செய்யவுள்ளதாகவும் அறிவிப்பு.
.