பேராவூரணி, மார்ச்.20 –
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணத்தை கொண்டு செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி கூடுதலாக பணம் கொண்டு செல்பவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேதுபாவாசத்திரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) மைதிலி தலைமையிலான பறக்கும் படை இரண்டாவது அணியினர், காவல்துறையினர் முத்துக்குமார், சச்சிதானந்தம், மற்றும் வீடியோ கலைஞர் ஸ்ரீகாந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஒட்டங்காடு கடைத்தெருவில் வாகனச் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனத்தில் ரூபாய் 1 லட்சத்து 59 ஆயிரத்து 40 ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து அவரிடம் விசாரித்த போது, சித்தி விநாயகர் ஏஜென்சி சார்பில், இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் ஹார்லிக்ஸ், பூஸ்ட், சோப், டூத்பேஸ்ட் போன்ற பொருட்களை கடைகளில் விற்பனை செய்து பெற்று வந்த பணம் என்பதும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் கொண்டுவரப்பட்டு, பேராவூரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் தனித்துறை ஆட்சியர்
பி.கலியமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது, பேராவூரணி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், முத்திரைத்தாள் கட்டணம் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தைப் பெற்றுச் செல்லலாம் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *