திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் வாரசந்தையில் ரம்ஜான் பண்டிகை,பங்குனி மாத கோயில் திருவிழாக்கள் எதிரொலியாக ஆடுகள், கோழிகள் விற்பனை ரூ.1.50 கோடிக்கு நடந்தது.
வடமதுரை,அய்யலுாரில் வியாழன் அன்று கூடும் வாரச்சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகம் நடக்கிறது.ரம்ஜான் பண்டிகை, பங்குனி மாத கோயில் திருவிழாக்களால் இறைச்சிக்காக ஆடுகள், கோழிகள் தேவை. இதனால் ஆடுகள், கோழிகள் வியாபாரம் அய்யலுார் சந்தையில் விறுவிறுப்பாக நடந்தது.
பத்து கிலோ வெள்ளாடு ரூ.8000, செம்மறி ஆடு ரூ.9000 என்ற அளவிற்கு விற்றது. திடகாத்திரமான செம்மறி ஆட்டு கிடாய்கள் ரூ. 30 ஆயிரம் வரை விலை போயின. பண்டிகைக்காக ஆடுகளை விலை கூடுதலாக இருந்தாலும் தயக்கமின்றி வாங்கி சென்றனர்.
இதனால் வழக்கமாக இறைச்சி கடைகளுக்கு சராசரி விலையில் ஆடுகள் வாங்கும் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாட்டுக்கோழி உயிருடன் எடை கிலோ ரூ. 600 என உயர்ந்திருந்தது. சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை ரூ.1.50 கோடியை தாண்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.