திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் மற்றும் ஆனந்தகிரி பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் வீடுதோறும் சென்று வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் வீடுதோறும் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணி 04.11.2025-அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வருகின்ற 04.12.2025-அன்று வரை வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர
திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் தங்களது பாகத்தில் உள்ள வாக்காளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் வழங்கி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் 04.11.2025 முதல் இன்று 08.11.2025 மாலை 6.00 மணி வரையில் 16,24,378 (83.97%) (பதினாறு இலட்சத்து இருபத்து நான்காயிரத்து முந்நூற்று எழுபத்தெட்டு) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்காளர்களுக்கு தொடர்ந்து கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இப்பணியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு துறையில் பணிபுரியக்கூடிய தன்னார்வலர்கள் (Volunteers) வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு உதவிட இரண்டு நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது விடுபட்ட நபர்களுக்கு மீண்டும் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்யும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக தங்களது வீடு தேடி வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு, கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சங்கர், கொடைக்கானல் வட்டாட்சியர் பாபு உட்பட பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *