கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் யு.எம்.டி. ராஜா தேர்தல் விழிப்புணர்விற்காகச் சூரிய ஒளியின் வெப்பத்தைப் பயன்படுத்தி ஒரு தனித்துவமான ஓவியத்தைப் படைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். “சுட்டுப் போட்டாலும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்” என்ற வலிமையான வாசகத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்தை வரைவதற்காக அவர் சுமார் இரண்டு நாட்களில் 12 மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றபடி லென்ஸ் மூலம் சூரியக் கதிர்களை ஒரு புள்ளியில் குவித்து மரப்பலகையில் சுட்டு இந்த கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார்.
இதில் எனது வாக்கு எனது உரிமை மற்றும் தேர்தல் சின்னம் போன்ற விழிப்புணர்வு அடையாளங்களுடன் பணம் வாங்குவது குற்றம் என்ற வாசகத்தையும் மிகத் தெளிவாகப் பொறித்துள்ள அவர் வாக்காளர்கள் பணத்திற்காகத் தங்கள் உரிமையை விற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார். வெயிலின் உஷ்ணத்தையே கருவியாகக் கொண்டு தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ள இந்த நூதன விழிப்புணர்வு ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது