C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்டம்
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் மின்கம்பத்துடன் கூடிய 128 அலங்கார மின் விளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன்,மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில் அண்ணாபாலம், கம்மியம்பேட்டை பாலம் மற்றும் தென்பெண்ணையாறு பழைய மற்றும் புதிய பாலம், ஆல்பேட்டை-
மஞ்சக்குப்பம் சாலை ஆகிய பகுதிகளில் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் மின்கம்பத்துடன் கூடிய 128 அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் சாலைகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்குகள், பள்ளி கட்டடங்கள் மற்றும் சுகாதார வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடலூர் மாநகராட்சியில் 2021-25ஆம் ஆண்டு வரை ரூ.542.98 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான 245 திட்டப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. கடலூர் மாநகராட்சிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் வகையில் வெள்ளிக் கடற்கரையில் பூங்கா உள்ளிட்ட நீலக்கொடி சான்று பெறுவதற்கான மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகிறது. மாநகராட்சியில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட புராதானமாக விளங்கக்கூடிய கட்டடங்களை பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
பொதுப்போக்குவரத்திற்கு இடையூறின்றி சாலை அமைக்கப்படுவதுடன், சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் மற்றும் விபத்துகளை தவிர்த்திடும் வகையில் சாலைகளில் மையத்தடுப்புகள் அமைத்து இருவழிகளாக மேம்படுத்தப்படுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்னை, திருச்சி போன்ற பெருநகரங்களுக்கு இணையாக ரூ.80 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மருதம் பூங்காவும் அமைக்கப்படவுள்ளது.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கம்மியம்பேட்டை, அண்ணாபாலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து பயன்பாடு அதிகமாக உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், பொதுபோக்குவரத்திற்கு இடையூறின்றி விபத்துகள் ஏற்படாவண்ணம் தவிர்த்திடவும் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம், அண்ணா பாலத்தினிடையே 360மீ நீளத்தில் 24 மின் விளக்குகள், கம்மியம்பேட்டை பாலத்தினிடையே 210மீ நீளத்தில் 13 மின் விளக்குகள், தென்பெண்ணை பழைய பாலத்தினிடையே 360மீ நீளத்தில் 27 மின் விளக்குகள், தென்பெண்ணை புதிய பாலத்தினிடையே 360மீ நீளத்தில் 26 மின் விளக்குகள், ஆல்பேட்டை முதல் மஞ்சக்குப்பம் வரை 760மீ நீளத்தில் 38 மின் விளக்குகள் என மொத்தம் 128 மின் விளக்குகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கிவைக்கப்பட்டது.
தற்போது 128 அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதை போல மாநகராட்சியின் வளர்ச்சியினை கருத்தில்கொண்டு, கூடுதலாக 100 மின் விளக்குகள் வருங்காலத்தில் அமைக்கப்படும். மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கேற்ப அப்பகுதியின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மாநகராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள பாதாளச் சாக்கடை திட்டத்துடன் புதியதாக விரிவுப்படுத்தப்படும் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.220 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்படும் என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயர் பா.தாமரைச்செல்வன்,மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் முஜீபூர் ரஹ்மான், என்எல்சி துணை பொதுமேலாளர்(ச.பொ.நி) ஞானப்பழம், துணை பொதுமேலாளர்(கட்டுமானம்) செல்லம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.