தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோவிலில் பங்குனி மாதத்தை முன்னிட்டு பெண்கள் சிறப்பு பங்குனிப் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பங்குனி மாதத்தில் நடைபெறும் கிராம தேவதைகள் மற்றும் அம்மன் கோயில்களில் கோடை காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பாரம்பரிய நிகழ்வாகும். நல்ல மழை, விவசாய வளம் மற்றும் நோய் நொடியற்ற வாழ்வு வேண்டி பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவது இந்த விழாவின் சிறப்பாகும். மேலும், பங்குனி உத்திரம் நாளில் சிவ-பார்வதி, முருகன்-தெய்வானை, ராமன்-சீதை ஆகிய தெய்வங்களின் திருக்கல்யாணம் நடைபெற்றதாக நம்பப்படுவதால், இந்த மாத வழிபாடுகள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சாதி, மத பேதமின்றி ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்ட இந்த விழா, பக்தி மற்றும் ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்நிலையில், ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, பிள்ளையாருக்கு படையல் செய்து பக்தி உணர்வுடன் வழிபட்டனர்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்