ம.சங்கரநாராயணன் செய்தியாளர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஒன்றானது மாசி திருவிழா மிக சிறப்பு வாய்ந்தது. முருக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த மாசி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்கள் மட்டும் மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்தாண்டிற்கான மாசி திருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவப்பு சாத்தி அலங்கார வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெள்ளை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி, பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா எழு, எட்டாம் திருநாளில் நடைபெற்றது. பத்தாம் திருநாளான தேரோட்டத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனமும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்றகால பூஜைகளும் நடைபெற்றது. தேரோட்டமானது காலையில் முதலில் விநாயகர் தேரானது நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வலம் வந்து தேர் நிலையத்தை வந்தடைந்தது.அதனை தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தேரில் எழுந்தருள கீழரதவீதிலிருந்து புறப்பட்ட தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து மீண்டும் தேர் நிலையத்தை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து முருகனை தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.