செய்தியாளர் சுப்பராயன்
புதுச்சேரி மாநிலம் மண்ணாடிபட்டு கொம்யூனில் உள்ள சிலுக்காரி பாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் திருமதி சுந்தரி அவர்கள் விவசாயிகளை வரவேற்றார். தொடர்ந்து மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் திருமதி கிரிஜா அவர்கள் உரையாற்றுகையில், புதுச்சேரியின் முக்கிய பயிரான நெல் சாகுபடியில் வரப்பு பயிராக (Border Crop) உளுந்து மற்றும் தட்டைப்பயிறு பயிரிடுவதன் மூலம் பூச்சி தாக்கத்தை குறைக்கும் முறைகள் குறித்து நடைபெற்ற ஆய்வுகளை விரிவாக விளக்கினார்.
பின்னர் முன்னோடி விவசாயி திரு. சுப்பிரமணியன் அவர்கள் உரையாற்றி, விவசாயிகள் தங்கள் பயிர்களுடன் இணைப்பயிர்கள், பொறி பயிர்கள், வரப்பு பயிர்கள் மற்றும் மூடு பயிர்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பலன்களை எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர் டாக்டர் சரவணனராமன் அவர்கள், புதுச்சேரி பகுதியில் பயிரிடப்படும் முக்கிய பயிர்களுக்கு ஏற்ற வரப்பு மற்றும் ஊடு பயிர்கள் குறித்து விளக்கி, அவற்றை சாகுபடி செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்த பயிற்சி முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ மனக்குள விநாயகர் வேளாண் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக செய்து உதவினர்.