தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
சாலைப்பணியாளர் முதுநிலைப் பட்டியல் கோரிக்கை – தாராபுரத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் கோட்ட அளவிலான கோரிக்கை கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அரசு விதிமுறைகளையும் உத்தரவுகளையும் பின்பற்றாமல், சாலைப்பணியாளர்கள் பயிற்சிப் பணியில் சேர்ந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட முதுநிலைப் பட்டியல் தவறானது என்பதைக் கூறி, அதனை ரத்து செய்ய வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர்.
மேலும், பணியாளர்கள் உண்மையில் பணி வரைமுறை செய்யப்பட்ட நாளையே அடிப்படையாகக் கொண்டு புதிய முதுநிலைப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தாராபுரத்தில் மட்டும் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்ததை வைத்து பதவி உயர்வு வழங்கி வருகின்றனர் இதில் அரசியலில் தலையீடுகளும் மற்றும் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டும் இதனை செய்து வருகின்றனர் இதனை உயர் அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருக்கின்றனர் இதற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கோட்டத் தலைவர் ஜே.எல். பீட்டர் தலைமையேற்று நடத்தினார். கோட்டச் செயலாளர் கே. செந்தில்குமார் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
வாழ்த்துரையாக வட்டக்கிளைச் செயலாளர் பி. ராஜு (ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம்), எஸ். நவீன் (தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்), மாநில தணிக்கையாளர் சி. பாலராஜசேகர் (பொது நூலகத்துறை அலுவலர்கள் சங்கம்), வட்டாரத் தலைவர் எம். பெரியசாமி (ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்), மாவட்டச் செயலாளர் கே. தமயந்தி (கிராம சுகாதார செவிலியர் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்புரையாக மாநில துணைத்தலைவர் பி. செந்தில்குமார் மற்றும் மாநில பொருளாளர் என். ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பேசினர். சாலைப்பணியாளர்களின் பணிநிலை, பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறைப் பிரச்சனைகள் குறித்து விரிவாக விளக்கினர். அவர்கள், “சாலைப்பணியாளர்களின் நீண்டகால சேவை மற்றும் நலன்கள் அரசால் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தினர்.
நிறைவுரையில் மாநில தலைவர் எஸ். ரமேஷ் பேசினார். அவர், “சாலைப்பணியாளர்கள் தினமும் மக்களின் உயிரைக் காப்பாற்றும் பணியை செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்,” என்றார்.
நன்றியுரையை கோட்டப் பொருளாளர் சி. ஜெகதீஸ் வழங்கினார்.
கூட்டத்தில் பல்வேறு துறைகளிலிருந்து நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்று, சாலைப்பணியாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.