எ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர்.

பெரம்பலூர். ஏப்.13. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்களும், விவசாயிகளும் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பிம்பலூர், பசும்பலூர், சோலை நகர், வெள்ளுவாடி, மேல்வாடி, ஜெயந்தி காலனி, காளையனூர், பெருநிலா, பில்லாங்குளம் காலனி, பில்லாங்குளம், காந்திநகர், அய்யனார் பாளையம், கை.களத்தூர், பாதாங்கி, சிறுநிலா, பாதாங்கி சீரங்கி பாளையம், போன்ற கிராமங்களுக்கு கூட்டணி கட்சி தொண்டர்களோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இன்று பிம்பலூர் கிராமத்திற்கு கூட்டணி கட்சியினரோடு ஓட்டு கேட்க சென்று கொண்டிருந்தபோது வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மக்களிடம், மக்களோடு மக்களாய் இணைந்து களை எடுத்து வாக்கு சேகரித்தார் வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன். மேலும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வாக்கு சேகரிக்கும் போது பொதுமக்களிடம் ஏற்கனவே தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது என்னென்ன பணிகளை செய்து கொடுத்தேன் என்றும், ஒவ்வொரு கிராமத்திலும் நிழற்குடை, சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உட்பட மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததை நினைவு படுத்தி பேசினார்.

இளம்பை. இரா. தமிழ்ச்செல்வனுக்கு வரவேற்பு கொடுத்த பெண்கள் கண்டிப்பாக இம்முறையும் நீங்கள்தான் சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்திற்கு செல்வீர்கள் என்று வெற்றித் திலகம் இட்டு வாழ்த்தியதையும் பார்க்க முடிந்தது. இன்றைய பிரச்சாரத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செழியன், பிம்பலூர் பெரியசாமி உட்பட கட்சியினர் ஏராளமானோர் உடன் சென்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *