மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி,செல்போன் டவரில் ஏறி தொண்டர் ஒருவர் வினோத போராட்டம்!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் ஜான் (57). இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகா நகரில் வசித்து வருகிறார். அங்கு மோட்டார் வாகன உரிமம் பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை கோவில்பட்டி தாமஸ் நகர் பகுதியிலுள்ள சுமார் 100 அடி உயரமுள்ள தனியார் செல்போன் டவர் மீது கையில் பெட்ரோல் கேனுடன் ஏறிய அவர், “முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை உடனடியாக திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் தீக்குளிப்பேன்” என மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்ற காவலர், ஜானிடம் நயமாகப் பேசி அவரது கவனத்தைத் திசைதிருப்பினார்.
அவரது துரிதமான செயலால், ஜான் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை கீழே போட வைத்தார்.
பெட்ரோல் கேன் மீட்கப்பட்ட போதிலும், ஜான் தொடர்ந்து டவர் உச்சியிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரைப் பாதுகாப்பாக கீழே இறக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் நிலவி வருகிறது.