பெரம்பலூர்.ஏப்.30. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குகள் 04.05.2026 அன்று எண்ணப்படவுள்ளது. அதனடிப்படையில், வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடானான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
வாக்கு எண்ணும் நாளன்று ஒவ்வொரு அலுவலருக்கும் பணி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக பேம்றகொள்ள வேண்டும்.
வேட்பாளர்கள், முகவர்கள் செல்வதற்கான வழி நிர்ணயம் செய்தல் மற்றும் உரிய எண்ணிக்கையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு அளித்தல், மொபைல் போன்கள் நுழைவு வாயிலில் பெற்று பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், வாக்கு எண்ணும் மையத்தில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளல், வாக்கு எண்ணிக்கை முடிவுற்றவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட கிடங்கிற்கு கொண்டு வருவதற்கு பாதுகாப்பு வழங்குதல். அஞ்சல் வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகத்திலிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்து வருதவதற்கு பாதுகாப்பு வழங்குதல், மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல் உள்ளிட்ட பணிகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணும் முகவர்கள் நியமனம், வாக்கு எண்ணும் அலுவலர்களின் மேஜை ஒதுக்கீடு குலுக்கல் முறை நியமனம், வாக்கு எண்ணும் நாளுக்கான இன்றியமையாத பொருள்கள் ஏற்பாடு செய்தல், உணவு, சிற்றுண்டி மற்றும் குடிநீர் மேலாண்மை,. வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வாக்கு எண்ணும் அலுவலர்கள், உதவியாளர்கள் நுண் மேற்பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், மின்னணு இயந்தரங்களுக்கான பாதுகாப்பு அறையிலிருந்து அந்தந்த இருக்கைக்கான கட்டுப்பாட்டு கருவி (Control Unit) வழங்கப்படுவதை கண்காணித்தல், வாக்கு எண்ணும் மையத்திற்கு அஞ்சல் வாக்குகளை எடுத்து வருதல் உள்ளிட்ட பணிகளை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்தில் போதிய அளவிலான தற்காலிக கழிவறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வருவதால் கழிவறைகளை அவ்வப்போது சுத்தம் செய்வதற்கு போதிய எண்ணிக்கையில் பணியாளர்களை பணியமர்த்துதல், உள்ளிட்ட பணிகளை ஊராட்களுக்கான உதவி இயக்குநர், நகராட்சி ஆணையர் ஆகியோர் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணுகை இடம் தொடர்பான வழிகாட்டி பதாகைகள், உள்ளே, வெளியே செல்லும் வழி பதாகைகள் உள்ளிட்ட அறிவிப்பு பலகைகளை (Signages) அமைத்தல், காவல் துறையினருடன் கலந்தாலோசனை செய்து கைபேசி பாதுகாப்பு அறை (Mobile Custody Centre) அமைத்தல், வேட்பாளர்கள் / முகவர்கள் உணவு அருந்தும் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித்துறையினர் அமைக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் அறைகளில் மற்றும் பள்ளி நுழைவு வாயிலில் ஒலிப்பெருக்கி அமைத்தல், சுற்று வாரியான வாக்குகள் விவரங்களை அறிவிக்க பள்ளி நுழைவு வாயிலிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அறைகளிலிலும் பதாகை (Flex Display board) அமைத்தல், சுற்று வாரியான வாக்கு எண்ணிக்கை விவரத்தினை பதிவு செய்திட அலுவலர்களை நியமித்து வாக்கு விவரங்கள் பதிவு செய்யப்படுவதை கண்காணித்தல் உள்ளிட்ட பணகளை நில அளவைகள் உதவி இயக்குநர் மேற்கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்தில் ஆம்புலன்ஸ் வசதி மற்றும் மருத்துவக் குழுக்கள் அமைத்தல், .அவசர உதவி மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வைத்திருத்தல், வெப்பம் அலை காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளின் படி போதிய முன்னேற்பாடுகள் செய்தல் உள்ளிட்ட பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வண்டிகள், தீ தடுப்பு உபகரணங்களை போதிய எண்ணிக்கையில் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
மொபைல் போன் உள்ளே அனுமதி கிடையாது என்பதால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் எவரும் செல்போன் கொண்டுவராததை உறுதி செய்திட வேண்டும்.
ஒவ்வொரு அலுவலரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து வாக்கு எண்ணிக்கை நல்லமுறையில் நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனிதா (பெரம்பலூர்), சக்திவேல் (குன்னம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வேல்முருகன்(தேர்தல்), சொர்ணராஜ் (பொது), தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அருளானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.