நாகப்பட்டினம்,மே.11-
திருப்புகலூர் அக்னீஸ்வரசாமி கோவிலில் நடைபெற்ற அப்பர் ஐக்கிய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அப்பர் ஐக்கிய திருவிழா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீசுவரசாமி கோவில் அமைந்துள்ளது. தேவார ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் இந்த கோவிலில் தான் ஐக்கியமானார். ஆதலால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் அப்பர் ஐக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது. அதேபோல இந்த ஆண்டு அப்பர் ஐக்கிய திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும், 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கருத்தரங்கம்
அதைதொடர்ந்து இரவு நடைபெற்ற திருமுறை கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமை தாங்கினார். நாகப்பட்டினம் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஆதீன புலவர் விவேகானந்தன், திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை அப்பர் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள், கோவில் பொருளாளர் பரமானந்தம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.