நாகப்பட்டினம்,மே.15-
திருமருகல் அருகே சேரும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி கீழசன்னாநல்லூர் ஜீவா நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக கடந்த 1 ஆண்டுக்கு முன்னர் அப்பகுதி சாலை முழுவதும் தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது.
பணிகள் முடிந்த பின்னர் சாலை தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டது. அதன் பின்னர் சேதமடைந்த சாலையை சீரமைக்க படாமல் கடந்த ஓராண்டு காலமாக சம்பந்தப்பட்ட துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலை வழியாக அன்றாடம் சென்றுவர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக சாலை முழுவதும் காணப்படுவதால் இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்பவர்கள் கூட சேற்றில் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.அதேபோல் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ், ஆட்டோ கூட சென்றுவர முடியாமல் உள்ளது.
நடவடிக்கை இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கடந்த ஓராண்டு காலமாக புகார் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. சாலை அமைத்து 6 மாத காலத்திற்குள் சாலை முழுவதும் சேதப்படுத்தி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டதால் அந்த சாலையை மீண்டும் அமைக்க ஐந்தாண்டு காலம் ஆகும் என அதிகாரிகள் கூறி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர்.
எனவே அரசு அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்து சேரும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துக் காத்துள்ளனர்.