கல்பாக்கம், ஆக. 18: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், நெற்குணப்பட்டு கிராமத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் புனித தோமையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளர் அருட்சகோதரி சுஜி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட்சகோதரி ஜான்சி வரவேற்றார். சென்னை மாதவரம் எஸ்.எம்.ஏ. சபைத் தலைவி ஜோஸ்பின் செல்வி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கூவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் கே.பி. சகாதேவன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவையொட்டி மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து பொம்மை நடனம், குடை நடனம், மலர் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு செய்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.