கோவை
தமிழக முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்துகளை பொதுமக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்க்கும் வகையில், தனது தனித்துவமான கலைப்படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வருபவர் யூஎம்டி ராஜா. பல்வேறு ஓவியங்கள் மற்றும் கலை வடிவங்கள் மூலம் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் அவரது முயற்சிக்கு சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், யூஎம்டி ராஜாவின் கலைப்பணிகளை பாராட்டும் வகையில் அவரது இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் கோவை பாபு, யூஎம்டி ராஜாவை நேரில் சந்தித்து அவரது கலைத்திறமை மற்றும் சமூக அக்கறையுடன் மேற்கொண்டு வரும் பணிகளை பாராட்டினார். மேலும், பொதுமக்களிடம் நல்ல கருத்துகள் மற்றும் அரசின் மக்கள் நலத் திட்டங்களை கலை வடிவில் கொண்டு செல்லும் அவரது முயற்சி பாராட்டத்தக்கது என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது விஜய் ரசிகர்கள் மற்றும் கழக தொண்டர்கள் பலரும் உடனிருந்தனர். யூஎம்டி ராஜாவின் படைப்புகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், சமூக நலன் சார்ந்த கருத்துகளை கலை மூலம் வெளிப்படுத்தும் பணியை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கலை மூலம் சமூக மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் யூஎம்டி ராஜாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.