நாகப்பட்டினம் மாவடம் நாகை ஒன்றியம் அகலங்கண் ஊராட்சி திருப்பணிக்கோட்டூரில் சுமார் 250 குடும்பங்கள் உள்ளது. முழுவதும் பட்டியலின மக்கள் மட்டுமே வசிக்க கூடிய இப்பகுதியில் குடிக்க தண்ணீரில்லாமல் காலங்காலமாக அவதிபட்டு வருகின்றனர்.
நிலத்தடி நீர் முழுவதுமாக உப்பு நீராக மாறியதால் அடி பைப்களில் வரும் தண்ணீர் குடிக்க முடியாமல் போனது. மேலும் அந்த பைப்பானதும் 250 குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு பைப் மட்டுமே உள்ளது. அதில் எவ்வளவு அடித்தாலும் சொட்டு சொட்டாகதான் தண்ணீர் வருகிறது. ஒரு குடம் நிரம்புவதற்கு அரை மணி நேரம் ஆகிறது. மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக போடப்பட்டுள்ள குழாய்கள் வீடுகள் தோறும் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த கிராம மக்கள் குடிதண்ணீருக்காக ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பக்கத்து கிராமங்களுக்கு சென்று குடங்களில் தண்ணீரை கொண்டுவரும் அவல நிலை உள்ளது. இருச்சக்கர வாகனங்களில் 2 , 3 கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக சுத்தமாக குடிநீரே வராததால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டும் வருகின்றனர். குடிநீர் வழங்க கோரி கோஷமிட்ட அவர்கள் தங்களது வேதனை கொட்டி தீர்த்தனர். பல ஆண்டுகளாக குடிநீருக்காக அவதிபடுவதாக கூறும் அவர்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்கு போனால்தான் எங்களால் குடும்ப நடத்தமுடியும் அன்றாட தினக்கூலியான நாங்கள் வேலைக்கு கூட போகாமல் குடிக்க தண்ணீரை கொண்டு வருவதற்கு ஊர் ஊராக அலைவதாக வேதனை தெரிவித்தனர்.
தங்கள் கிராமத்தில் இருந்து 2 , 3 கிலோ மீட்டரில் உள்ள பக்கத்து கிராமங்களுக்கு சென்று தண்ணீர் புடிக்க சென்றால் அப்பகுதி மக்கள் தங்களை திட்டுவதாக கூறி ஆவேசம் அடைந்தனர். மிதி, வண்டி, இருச்சக்கர வாகனம் உள்ளவர்கள் அதில் எடுத்து வருகிறார்கள்.
இல்லாதவர்கள் அவ்வளவு தூரத்தில் இருந்து தலையிலும், தோலிலும் சுமந்து வருவதாக கண்கலங்கினர். உடனடியாக ஜல்ஜீவன் திட்டம் மூலமாக அமைக்கப்பெற்ற குழாய்களில் தண்ணீர் விடவும், கொள்ளிடம் கூட்டு குடி நீரை தங்கள் கிராமத்திற்கு கொண்டு வர வேண்டும் என கூறியவர்கள் அதுவரை டேங்கர் லாரி மூலமாவது தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கிராம மக்களின் அத்யவாசிய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதும் அதற்கான நடவடிக்கை எடுப்பதும் அரசு மற்றும் அதிகாரிகளின் கடமை எனக் கூறி வருகின்றனர்.