“காவல்துறை உங்களுடன் இருக்கிறது” – சிறுமியின் தாயாருக்கு ஆறுதல் கூறிய ஐஜி ரம்யா பாரதி,
உதவி கேட்க தயங்க வேண்டாம் காவல்துறை எப்போதும் துணையாக இருக்கும்” – சூலூர் சிறுமியின் தாயாரிடம் ஐஜி ரம்யா பாரதி உருக்கம்.காவல்துறை உங்கள் பக்கம் இருக்கிறது – அழுதுகொண்டிருந்த தாயாருக்கு மருத்துவ உதவி வழங்கி மேற்கு மண்டல ஐஜி ஆறுதல்.கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் நேரில் ஆறுதல் கூறப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தற்போது கண்ணம்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி வருகிறார். சிறுமியின் தாயை பார்ப்பதற்காக, தமிழக அமைச்சர் விக்னேஷ் மற்றும் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (IG) ரம்யா பாரதி ஆகியோர் நேரில் சென்று அவரைச் சந்தித்தனர்.
மகளை இழந்து தவிக்கும் தாயாருக்கு கனிவுடன் ஆறுதல் கூறிய ஐஜி ரம்யா பாரதி, அரசு மற்றும் காவல்துறை சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் தடையின்றி வழங்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், “உங்களுக்கு என்ன உதவிகள் தேவைப்பட்டாலும் தயக்கமில்லாமல் கேட்டுப் பெறலாம்; காவல்துறை எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.இந்தச் சந்திப்பின் போது, தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் சிறுமியின் தாயாரின் கண்கள் சிவந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்ட ஐஜி ரம்யா பாரதி உடனடியாக துரித நடவடிக்கை எடுத்தார். அங்கு நின்றிருந்த அதிகாரிகளை அழைத்து, அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.மேலும், கடுமையான மன உளைச்சலில் இருக்கும் அவருக்கு, மனநல மருத்துவர்கள் மூலம் உரிய கவுன்சிலிங் (மனநல ஆலோசனை) வழங்கவும் அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட தாயாரின் துயரறிந்து, ஒரு தாயுள்ளத்தோடு ஐஜி ரம்யா பாரதி காட்டிய இந்த பரிவும், உடனடி மனிதநேய நடவடிக்கைகளும் அங்கு கூடிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.