துறையூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
திருச்சி மே -27
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நேற்று (26/05/2026) பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் தேர்வு கால விடுமுறை முடிந்து ஜீன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இதனை தொடர்ந்து
திருச்சியில் விக்னேஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் வே சரவணன் தலைமையில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வே சரவணன் உத்தரவு படி துறையூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா இ.ஆ.ப., தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது.இதில் சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து துறை, மருத்துவ துறை, தீயணைப்பு துறை,பள்ளிக்கல்வித்துறை,
108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து துறையூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா பள்ளி வாகனங்களில் கேமரா, ஜிபிஎஸ் கருவிகள், ஜன்னல் கம்பிகளின் தரம், தீ தடுப்பு கருவி, முதல் உதவி பெட்டி ,அவசரகால கதவு, ஓட்டுநர் பாதுகாப்பு தடுப்பு, பிரேக் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை நேரடியாக ஆய்வு செய்தார்.அப்போது பின்பக்கம் உள்ள அவசர காலக்கதவு திறப்பதற்கு இடையூறாக இருக்கைகள் இருக்கக் கூடாது, வாகன டூல்ஸ் பாக்ஸ் டிரைவர் அருகில் முன் பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும், குறிப்பிட்ட மாணவர்கள் மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும்,மருத்துவ உபகரணங்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதில் 19 தனியார் பள்ளிகளை சேர்ந்த 85 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 77 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.சில தனியார் பள்ளிகளை சேர்ந்த 8 பள்ளி வாகனங்களில் சில குறைகள் இருந்ததால் அந்த வாகனங்களுக்கு மட்டும் தகுதி சான்றிதழ் வழங்கப்படவில்லை, குறைகள் சரி செய்து காண்பித்த பிறகு தகுதி சான்றிதழ் வழங்கப்படும் என்றும்,மீதமுள்ள பள்ளி வாகனங்களை அடுத்தடுத்த வேலை நாட்களில் ஆய்வு மேற்க் கொள்ளப்படும் என்றும் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் (பொ) ப.சதாசிவம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு முறைகளை ஓட்டுநர்கள் முன்பு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
108 ஆம்புலன்ஸ் சேவை பற்றி செயல் விளக்கத்துடன் அவசர கால முதலுதவி தொடர்பு எண் பற்றி கூறி செயல் விளக்கம் தந்தனர்.இதில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜெ.அண்ணாதுரை, ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ்பாபு, மோட்டார் வாகன ஆய்வாளர்(பொ) ப.சதாசிவம்,காவல் உதவி ஆய்வாளர் ராஜதுரை, தீயணைப்பு துறை அலுவலர் ராமன்,108ஆம்புலன்ஸ் பணியாளர்கள்,பள்ளி ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜு
திருச்சி மாவட்ட செய்தியாளர்