திருவாரூர்.,
தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாயகி உடனுறை ஸ்ரீ கண்ணாயிர நாதசுவாமி, ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த வைகாசி ஆறாம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய திருவிழாவான ஆதிவிடங்க தியாகராஜசுவாமியின் வைகாசி விசாக தேரோட்ட விழா இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.இதையொட்டி இன்று காலை ஆதிவிடங்க தியாகராஜசுவாமி, அம்பாள், வினாயகர், சுப்ரமணியர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு எழுந்தருள செய்யப்பட்டது.தொடர்ந்து தேரில் ஆதிவிடங்க தியாகராஜசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அருள்மிகு ஆதிவிடங்க தியாகராஜ சுவாமியின் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துக்கொண்டு ஆரூரா தியாகராஜா என கோஷங்கங்கள் எழுப்பியபடி தேரின் வடம் பிடித்து இழுத்தனர். மேலும் இந்த திருத்தேர் கீழவீதி நிலையடியில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் அசைந்தாடி வலம் வந்தது.