கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான சுற்றுலாதுறை மாநாடு நடைபெறவுள்ளது
இந்தியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் மிக முக்கியமான வருடாந்திர நிகழ்வான ஸ்கால் இந்தியா தேசிய மாநாடு 2026 குறித்த அறிமுக விழா, கோவை தி ரெசிடென்சி டவர்ஸில் இன்று நடைபெற்றது.
வரும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை, கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த தேசிய மாநாட்டை ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர் ஏற்பாடு செய்கிறது. கோவையில் முதன்முறையாக நடைபெறவுள்ள இம்மாநாட்டில், இந்தியா முழுவதிலுமிருந்து சுற்றுலா, பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அன்னபூர்ணா ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. டி. சீனிவாசன் கலந்து கொண்டார் கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு. சதீஷ் கே.எஸ். (IFS), கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் திருமதி டி. ஜெகதீஸ்வரி, தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கம் செயல்பாட்டு இயக்குநர் சுந்தர் சிங்காரம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
ஸ்கால் இந்தியா தலைவர் திரு. சஞ்சீவ் மேஹ்ரா, ஸ்கால் இன்டர்நேஷனல் துணைத் தலைவர் திரு. எஸ்.என்.எஸ். மோகன், ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர் தலைவர் திரு. ரமேஷ் சந்திரகுமார், மாநாட்டு தலைவர் திரு. பி.கே. கணேஷ், செயலாளர் திரு. நிஜோ ஆகஸ்டின் ஆகியோர் இணைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அவர்கள் பேசுகையில்,
தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், சுற்றுலாத்தளங்கள் மற்றும் அதன் சிறப்புகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் முக்கிய வாய்ப்பாக இந்த மாநாடு அமையும் என தெரிவித்தனர்.
இந்தியாவில் தற்போது 25 ஸ்கால் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. ஹோட்டல் உரிமையாளர்கள், விருந்தோம்பல் துறை நிபுணர்கள், கேட்டரிங் துறையினர், ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் தளமாக ஸ்கால் அமைப்பு விளங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த தேசிய மாநாடு, இம்முறை முதன்முறையாக கோவையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மாநாட்டின் முக்கிய நோக்கம் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார சுற்றுலாத்தலங்களை தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் மேலும் வலுப்படுத்துவதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதாகும்.
மூன்று இரவுகள் மற்றும் நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பிரதிநிதிகளுக்கு கோவை மற்றும் அதன் சுற்றுலா வளங்கள் , உணவுகள் , கலாச்சாரம் குறித்த விரிவான நேரடி அனுபவம் மற்றும் தகவல்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், இந்திய சுற்றுலாத்துறையின் எதிர்கால வளர்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொறுப்புணர்வான சுற்றுலா, சமூக பங்களிப்பு மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் குறித்து மாநாட்டில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
இந்த மாநாட்டின் மூலம் கோவை, இந்தியாவின் முக்கிய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மையங்களில் ஒன்றாக மேலும் வலுப்பெறும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.