தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் முப்பரிமாண மின்சாரம் முறையாக கிடைக்காததால் விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்ச மின் மோட்டார்கள் இயங்காமல், குருவை சாகுபடி மேற்கொள்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி
திருவள்ளுவர் விவசாயிகள் நலச் சங்க மாநிலத் தலைவர கலைமணி தலைமையில் நிர்வாகிகளான மணிக்குடி சின்னதுரை, செல்வராஜ், ட செந்தில், என். ராமகிருஷ்ணன். ஆர். சிவானந்தம் ஆகியோர் நேரில் சென்று மின்சார வாரிய கோட்ட பொறியாளரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது
கும்பகோணம் அருகே உள்ள குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பந்தநல்லூர், மேலமரத்துறை, சோழியவிளாகம், நெய்குப்பை, சாய்னாபுரம், திருமங்கைச்சேரி, வன்னிக்குடி உள்ளிட்ட கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஜூன் ஜூலையில் நடைபெறும்
குருவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கடந்த ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படாததால் வயல்களில் உள்ள மின் மோட்டார்கள் இயங்காமல், பயிர்களுக்கு தேவையான நேரத்தில் பாசன நீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டதாக கவலை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நிலவும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் மோட்டார்கள் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், நெற்பயிர்கள் வாடி, விளைச்சல் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.இதனுடன், பஞ்சாயத்து குடிநீர் திட்டங்களின் மோட்டார்களும் செயல்படாததால் பல கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, பொதுமக்களும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.எனவே, போதுமான மின்னழுத்தத்துடன் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கி, விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை
திருவள்ளுவர் விவசாயிகள் நலச் சங்கத்தினர் திருவிடைமருதூர் மின்சார வாரிய கோட்ட பொறியாளரிடம் , கோரிக்கை மனு அளித்தனர்.