மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு!
அங்கன்வாடி மையம் கட்டக்கோரி தரையில் அமர்ந்து கவுன்சிலர் போராட்டம்
“84வது வார்டுக்கு நீதியேப்போது?” – மாமன்றத்தை புறக்கணித்து அதிரடி போராட்டத்தில் ஈடுபட்ட SDPI கவுன்சிலர் அலிமா ராஜா உசேன்
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் 84வது வார்டில் அங்கன்வாடி மையம் அமைக்கக் கோரி SDPI கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் அலிமா ராஜா உசேன் வலியுறுத்தியதைத் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவியது.
84வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அங்கன்வாடி மையம் அமைக்கப்பட வேண்டும் என மாமன்றத்தில் கோரிக்கை முன்வைத்த அவர், சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்கள் நலனுக்காக இந்த மையம் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கைக்கு மாநகராட்சி ஆணையாளர் பதிலளிப்பதாக தெரிவித்திருந்தாலும், உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாததால் தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அலிமா ராஜா உசேன் மாமன்றக் கூட்டத்தை புறக்கணித்தார். பின்னர் மாமன்ற அரங்கில் தரையில் அமர்ந்து கையில் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, “84வது வார்டுக்கு நீதியேப்போது?”, “அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்திய அவர், மாநகராட்சி நிர்வாகம் மக்களின் நியாயமான கோரிக்கையை தாமதமின்றி ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், இது அரசியல் நோக்கத்திற்காக முன்வைக்கப்படும் கோரிக்கை அல்ல என்றும், குழந்தைகளின் எதிர்காலம், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களின் அடிப்படை நலன் சார்ந்த கோரிக்கை என்பதால் 84வது வார்டில் அங்கன்வாடி மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த போராட்டம் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், 84வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.