கீழப்பழுவூரில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (21.06.2026) சிறப்பாக நடைபெற்றது.இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளான “ஆரோக்கியமான முதுமைக்கு யோகா” (Yoga for Healthy Ageing) என்ற தலைப்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் திரு. ஆர்.பி. முத்தையா சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், யோகா என்பது வெறும் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் பயிற்சி மட்டுமல்லாமல், உடல் நலம், மனநலம், செயல்திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முழுமையான வாழ்க்கை முறையாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக வயது முதிர்ந்த காலத்திலும் உடல் இயக்கத் திறன், மன உறுதி மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதற்கு யோகா பெரிதும் உதவுகிறது என்றும் வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பல்வேறு யோகாசன செயல்விளக்கங்களும் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள், பணியாளர்கள், மகளிர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் யோகா பயிற்சிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
மேலும், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டு, செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் யோகா ஆயுஷ் (Yoga Ayush) இணையதளத்தின் மூலம் சான்றிதழ் எண் 35074417-ன் கீழ் யோகா உறுதிமொழி நிறைவுச் சான்றிதழையும் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பல்வேறு துறைத் தலைவர்கள், அதிகாரிகள், சிகப்பி ஆச்சி மகளிர் மன்றத் தலைவி மற்றும் உறுப்பினர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பெருமளவில் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் எக்ஸிகியூட்டிவ் ஸ்மைல் ஸோன் (Executive Smile Zone) மற்றும் சிகப்பி ஆச்சி மகளிர் மன்றம் (SALC) ஆகியவை இணைந்து சிறப்பாக செய்திருந்தன.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழா, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையிலும், யோகாவின் அவசியத்தை பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வகையிலும் பயனுள்ளதாக அமைந்தது.