தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குனரும் திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோயம்புத்தூர் குனியமுத்தூரைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் யு.எம்.டி. ராஜா ஒரு நெகிழ்ச்சியான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார்.
அவர் தூய்மையான பசும்பாலின் மேல் படர்ந்த ஆடையைக் கொண்டு, அதன் மீது இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் திருவுருவத்தை மிக நேர்த்தியாக ஓவியமாக வரைந்துள்ளார். பின்னர் அந்த ஓவியத்திற்கு மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி, தீபாராதனை காட்டி தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தியுள்ளார்.
பாக்யராஜ் அவர்களின் குருநாதரான இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கும் முன்னதாக அஞ்சலி ஓவியம் வரைந்திருந்ததை நினைவு கூர்ந்த கலைஞர் ராஜா, “என்னுடைய ஒவ்வொரு படைப்பையும், குறும்படங்களையும் நான் முதலில் பாக்யராஜ் சார் அவர்களுக்குத்தான் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி வைப்பேன்; அவரும் அதைப்பார்த்து ரசித்து, என்னை மனதாரப் பாராட்டுவார். ஆனால், இன்று அவருக்கே நான் கண்ணீர் அஞ்சலி ஓவியம் வரைவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இதை நினைக்கும் போது என் மனம் மிகவும் வேதனை அடைகிறது.
கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் இந்த பசும்பால் ஆடை ஓவியத்தை வரைந்து முடித்துள்ளேன்” என்று மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த பசும்பால் ஓவிய அஞ்சலி குறித்த செய்தி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.