வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர், ஜூலை 4:
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியின் மாதாந்திர சாதாரண நகர்மன்ற கூட்டம், கடந்த ஜூன் 30-ஆம் தேதி நகர்மன்ற தலைவர் செல்வராணி தலைமையிலும், நகராட்சி ஆணையர் கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அம்மன் பாபு பேசுகையில், தனது வார்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளில் சில முற்றிலும் பழுதடைந்து, பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே, பழைய மற்றும் சேதமடைந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை அகற்றி, புதிய குடிநீர் தொட்டிகளை உடனடியாக அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், தற்போது மாதாந்திர குடிநீர் கட்டணத்தை ரூ.80-இலிருந்து ரூ.300 ஆக உயர்த்தும் முன்மொழிவு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அம்மன் பாபு, பொதுமக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நகர்மன்றம், மாதாந்திர குடிநீர் கட்டணத்தை ரூ.300-க்கு பதிலாக ரூ.200 ஆக நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த முடிவு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.