வலங்கைமான், ஜூலை 6: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா புலவர் நத்தம் பகுதியைச் சேர்ந்த அங்குராசுவுக்கு சொந்தமான டிராக்டரில், அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (45) பல ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் வயலில் நடவு பணிக்காக டிராக்டரை பயன்படுத்தி உழவு பணியை முடித்துவிட்டு, அங்கிருந்து மற்றொரு வயலுக்கு செல்லும் வகையில் வரப்பின் மீது டிராக்டரை ஏற்ற முயன்றுள்ளார். அப்போது டிராக்டர் சரிவர ஏறாததால் சமநிலை இழந்து திடீரென தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில், டிராக்டரின் கீழ் சேற்றில் சிக்கிய பழனிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருகில் வயல்வெளியில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் டிராக்டரை அப்புறப்படுத்தி, சேற்றில் சிக்கியிருந்த பழனிவேலின் உடலை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பழனிவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக வலங்கைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.