மன்னார்குடி., ஜூலை. 06
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டெப்போ சாலையில் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சியின் குப்பை கிடங்கு, அந்த நகரைப் பெரும் சுற்றுச்சூழல் அபாயத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நிறைந்த குடியிருப்புப் பகுதிக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்தக் குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மன்னார்குடியில் அன்றைய சூழலுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக – டெப்போ சாலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட கூடாது என அந்த பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கூறியிருந்தது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மன்னார்குடி நகராட்சி வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஹோட்டல்கள் , தனியார் திருமண மண்டபங்களில் சேகரிக்கபடும் இலைகள், பாலித்தின் பைகள் உள்ளிட்ட கழிவு பொருட்களை கொட்டுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
திடீரென டெப்போ சாலையில் உள்ள பொதுமக்கள் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னார் அங்கு வந்த மன்னார்குடி காவல் ஆய்வாளர் , போராட்டகாரர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் நகராட்சி நிர்வாகம் இனி குப்பைகள் கொட்ட மாட்டோம் என உறுதியளித்த பின்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடபட்டது.