அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கம் சார்பில், காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழவும் வேண்டி சிறப்பு வேள்வி யாகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு காவிரி ஆற்றங்கரையில் நடைபெற்றது. கோ பூஜை செய்து, ஏழு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலச பூஜை மற்றும் வேள்வி யாகத்தை நடத்தினர். தொடர்ந்து காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை மற்றும் நதிவழிபாடு நடைபெற்றது. வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட கலச நீர் காவிரி ஆற்றில் கலக்கப்பட்டு, காவிரி நதி என்றும் வற்றாத ஜீவநதியாக விளங்க வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.
இந்நிகழ்வில் காவேரி நீர் பாசன விவசாய சங்கத் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் ஐயர், ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி அறக்கட்டளை அறங்காவலர் பிச்சுமணி ஐயங்கார், ஸ்ரீரங்கம் பாலு தீட்சிதர், வயலூர் ராஜேந்திரன், அகவை முதிர்ந்த தமிழறிஞர் எசனக்கரை சுப்பிரமணியன், தண்ணீர் அமைப்பு நீலமேகம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார், அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கத்தின் பொருளாளர் பிரேம்குமார், ஏவூர் ஊராட்சி முன்னாள் தலைவர் பரமசிவம், குணசீலம் ஊராட்சி முன்னாள் தலைவர் நடராஜன், ஓய்வு பெற்ற பொறியாளர் ராஜகோபால், 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கத் தலைவர் யோகநாதன் பேசுகையில்,காவிரி நதி தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவதால், அதன் நீர்வளத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் வளமாக வழங்குவது காலத்தின் கட்டாயம்.
காவிரி நீர்வரத்து தடையின்றி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும், பருவமழை வளம் பெருக வேண்டும், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்ப வேண்டும், விவசாய உற்பத்தி உயர வேண்டும், குடிநீர் வளம் பாதுகாக்கப்பட வேண்டும், சுற்றுச்சூழல் சமநிலை நிலை நிறுத்தப்பட வேண்டும், உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழ வேண்டும்.
காவிரி ஆறு மற்றும் பிற நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் பாதுகாப்பது, மழைநீர் சேகரிப்பை ஊக்குவிப்பது, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, மரக்கன்றுகள் நடுவது, ஏரிகள் மற்றும் குளங்களைப் பாதுகாக்க வேண்டும். நீர்வளப் பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல; சமூக அமைப்புகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் கூட்டுப்பொறுப்பாகும்
என நிகழ்வில் பங்கேற்ற நதிநீர் சங்க நிர்வாகிகளுக்கும்
விவசாயிகளுக்கும் வஸ்திர மரியாதை செய்து கவுரவித்ததுடன், பிரசாதம் வழங்கி நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.